கடையம், மார்ச் 20: கடையம் அருகே மேட்டூரில் குடிநீர் தொட்டிக்கு தோண்டிய குழியால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடையம் அருகே மேட்டூரில் ரேஷன் கடை உள்ளது. இதனருகே உள்ள நீர்த்தேக்க தொட்டியில், கிணற்றில் இருந்து நீரேற்றப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த நீர்த்தேக்க தொட்டி பழுது காரணமாக, இதனை அகற்றிவிட்டு புதிதாக நீர்த்தேக்க தொட்டி அமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. இதற்கான பணிகள் துவங்கப்பட்டு ரேஷன் கடை அருகே குழி தோண்டப்பட்டது. ஒரு வாரம் பணிகள் நடந்த நிலையில், தற்போது கிடப்பில் போடப்பட்டதால் ரேஷன் கடைக்கும் வரும் பெண்கள், முதியவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே புதிய நீர்த்தேக்க தொட்டி பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.