சிவகிரி, மார்ச் 20: வாசுதேவநல்லூரில் 400 மீட்டர் தூரத்துக்கு சாலை வசதியில்லாததால், சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 20 கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் சுமார் 6 கிமீ தூரம் சுற்றிச் செல்லும் அவலம் உள்ளது. நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூருக்கு மேற்கே உள்ள பெரியகுளத்தில் இருந்து வெளியேறும் உபரி நீர், கலிங்கல் ஆறு வழியாக நகருக்குள் வந்து கிழக்கே உள்ள பனையூர் நோக்கிச் செல்கிறது. வாசுதேவநல்லூர் 1வது வார்டு பகுதியில் உள்ள அம்பேத்கர் தெருவின் கீழ்ப்பகுதியில் செல்லும் கலிங்கல் ஆற்றின் மேற்புறத்தில் 400 மீட்டர் தூரத்திற்கான மங்கம்மாள் சாலை வண்டிப்பாதை பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்த வண்டிப்பாதைதான் வாசுதேவநல்லூருக்கும், வாசுதேவநல்லூருக்கு கிழக்கு, வடகிழக்கு மற்றும் வடக்கு திசையிலுள்ள ராயகிரி, சரவணாபுரம், ராமநாதபுரம், மேட்டுப்பட்டி, வேலாயுதபுரம், திருமலாபுரம், நாரணபுரம், ஏமன்பட்டி, தும்பைமேடு, கீழப்புதூர், கூடம்பட்டி உள்ளிட்ட 20 கிராமத்திற்குமான இணைப்புப் பாதையாக மங்கம்மாள் சாலை என்ற பெயரில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த 20 கிராம மக்களும் ராஜபாளையம் - தென்காசி மாநில நெடுஞ்சாலை, திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலை வசதிகள் வருவதற்கு முன்பு வாசுதேவநல்லூர் பகுதிக்குள் நுழைவதற்கு நாரணபுரம் வழியாக மங்கம்மாள் சாலையையே பயன்படுத்தி வந்தனர். மேலும் நாரணபுரம் பகுதியில் உள்ள இலங்குளம், முள்ளிக்குளம், சின்னப்பாறைக்குளம், பெரியபாறைக்குளம், அருகன்குளம், மூக்கிகுளம் ஆகிய குளத்து பாசனத்தைச் சேர்ந்த சுமார் 1500 ஏக்கர் விளை நில விவசாயிகளும், தங்களது விளைபொருட்களை மாட்டுவண்டிகள் மூலம் இந்த சாலை வழியாகத்தான் கொண்டு சென்று வந்துள்ளனர்.இதனிடையே சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வாசுதேவநல்லூர் நகரின் கழிவுகளும், சாக்கடை நீரும், கலிங்கல் ஆற்றில் கலந்து வந்ததால் மங்கம்மாள் சாலை வண்டிப்பாதையில் சுமார் 400 மீட்டர் தூரத்திற்கு சேறும், சகதியும் மாறி முட்புதர்கள் வளர்ந்து வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு பாதையை அடைத்துள்ளது.