தூத்துக்குடியில் கனிமொழியை ஆதரித்து வைகோ மார்ச் 22ல் பிரசாரம்

தூத்துக்குடி, மார்ச் 20: தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து மதிமுக பொதுச் செயலர் வைகோ தூத்துக்குடியில் மார்ச் 22ம் தேதி பிரசாரம் மேற்கொள்கிறார்.இதுகுறித்து திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை:மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி, விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஏ.சி. ஜெயக்குமார் ஆகியோரை ஆதரித்து மார்ச் 22 மற்றும் 23ம் தேதிகளில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ பிரசாரம் செய்கிறார்.

22ம் தேதி இரவு 7 மணிக்கு தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு கனிமொழியை ஆதரித்து வைகோ பேசுகிறார். தொடர்ந்து, இரவு 7.30 மணி அளவில் குறுக்குச்சாலை சந்திப்பில் வேன் மூலம் பிரசாரம் செய்கிறார். அடுத்து இரவு 8 மணிக்கு குளத்தூர் மெயின் பஜாரிலும், 8.30 மணிக்கு விளாத்திகுளம் மெயின் பஜாரிலும்,  9 மணிக்கு நாகலாபுரத்திலும், 9.30 மணிக்கு புதூர் மெயின் பஜாரிலும் திறந்த வேனில் சென்றபடி வைகோ பிரசாரம் செய்கிறார்.

 23ம் தேதி மாலை 4 மணி அளவில் கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் எதிரில் வைகோ தேர்தல் பிரசாரம் செய்கிறார். அனைத்து நிகழ்ச்சிகளிலும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: