×

திருப்பத்தூர் அருகே மனைவியை எரித்து கொலை செய்த டிரைவருக்கு ஆயுள் தண்டனை வேலூர் மகளிர் கோர்ட் தீர்ப்பு


வேலூர், மார்ச் 20:திருப்பத்தூர் அருகே மனைவியை எரித்து கொலை செய்த டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து வேலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி குரும்பர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்(32), டிரைவர். இவருக்கும் திருப்பத்தூர் மேற்கத்தியானூர் கிராமத்தை சேர்ந்த பிரியா(23)வுக்கும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்ததும் கிருஷ்ணகிரியில் வாடகை வீட்டில் கணவன் மனைவி வாழ்ந்து வந்துள்ளனர். அப்போது சுரேஷ் அடிக்கடி குடித்துவிட்டு வந்து பிரியாவை அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார். இதனால் பிரியா கணவனை பிரிந்து திருப்பத்தூர் மேற்கத்தியானூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துவிட்டார். இதையடுத்து சுரேஷ் 2 வாரங்களுக்கு ஒருமுறை மனைவியை வந்து பார்த்து சென்றுள்ளார். பின்னர் ஒருநாள் குடும்பம் நடத்த தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார்.

ஆனால் பிரியா, சுரேஷூடன் செல்ல மறுத்துள்ளார். அப்போது என்னுடன் ஏன் வர மறுக்கிறாய்? உனக்கு யாருடனோ தொடர்பு உள்ளது என்று கூறி தகராறு செய்துள்ளார். வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த சுரேஷ், மனைவி பிரியாவை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்துள்ளார். இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து சுரேஷை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை வேலூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி செல்வம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனைவியை எரித்து கொலை செய்த சுரேஷூக்கு ஆயுள் தண்டனையும், ₹1,000 அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.

Tags : Vellore Women's Court ,Tirupattur ,
× RELATED மண்டைய உடைக்குறாங்க… மரியாதை கொடுக்க...