சென்னை, மார்ச் 20: துபாயில் இருந்து ₹15.5 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை, விமானத்தில் கடத்தி வந்த வாலிபர் சென்னை விமான நிலையத்தில் சிக்கினார்.துபாயில் இருந்து நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு எமரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, சென்னையை சேர்ந்த சுல்தான் (28) என்ற வாலிபர், சுற்றுலா பயணியாக துபாய் சென்று திரும்பினார்.
சுங்க அதிகாரிகளுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை மடக்கி, அவரது உடமைகளை சோதனையிட்டனர். அப்போது, அவருடைய சூட்கேசில் கார்பன் பேப்பரால் சுற்றப்பட்ட ஒரு பார்சல் இருந்தது. அதை பிரித்து பார்த்தபோது அதில், 8 தங்க கட்டிகள் இருந்ததை கண்டுபிடித்தனர். மொத்த எடை 465 கிராம். இதன், சர்வதேச மதிப்பு ₹15.5 லட்சம். இதையடுத்து அதிகாரிகள் அந்த தங்க கட்டிகளை பறிமுதல் செய்து, சுல்தானை கைது செய்து விசாரிக்கின்றனர்.