சென்னை: கொல்கத்தா குழந்தைகள் இல்லத்தில் இருந்து தத்தெடுத்த 4 வயது பெண் குழந்தையை சித்ரவதை செய்ததாக தம்பதியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை மந்தைவெளி ஜெத் நகர், 2வது மெயின் ரோட்டை சேர்ந்தவர் கவுசிக் ராய்(43). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மேரி சுஜா ராய் (38). திருமணம் நடந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் குழந்தை ஒன்றை தத்தெடுக்க முடிவு செய்தனர். அதன்படி மேற்குவங்க மாநில கொல்கத்தாவில் உள்ள குழந்தைகள் இல்லம் ஒன்றில் இருந்து கடந்த 3 மாதத்திற்கு முன்பு கீஷ ராய் (4) என்ற பெண் குழந்தையை முறைப்படி உரிய ஆவணங்களுடன் தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.
இந்நிலையில் கொல்கத்தாவில் உள்ள குழந்தைகள் இல்லம் நிர்வாகிகள், தத்து கொடுத்த குழந்தை எப்படி இருக்கிறது என்று நேரில் வந்து பார்த்துள்ளனர். அப்போது, கீஷ ராய்க்கு இரண்டு கை மற்றும் இடது கன்னம், இடது காலில் காயம் ஏற்பட்ட தழும்புகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து கவுசிக் ராய் மற்றும் ேமரி சுஜா ராயிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் முறையாக பதில் அளிக்க வில்லை என்று கூறப்படுகிறது. உடனே இதுகுறித்து குழந்தைகள் நல அதிகாரி மகேஸ்வரியிடம் தத்தெடுத்த குழந்தையை சித்ரவதை ெசய்துள்ளதாக கொல்கத்தாவை சேர்ந்த குழந்தைகள் இல்ல நிர்வாகிகள் புகார் அளித்தனர். அதன்படி, மகேஸ்வரி குழந்தையை நேரில் வந்து பார்த்து சம்பவம் குறித்து அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் குழந்தையை தத்தெடுத்த தம்பதியை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர்களிடம் இருந்து தத்தெடுத்த குழந்தையை மீட்டு டான்பாஸ்கோ அன்பு இல்லத்தில் ஒப்படைத்தனர்.