திருப்பூர், மார்ச் 19: மக்களைவ தேர்தலையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் துப்பாக்கி உரிமம் பெற்ற 613 பேரில் 426 பேர் தங்களது துப்பாக்கிகளை போலீஸ் ஸ்டேஷன்களில் ஒப்படைத்துள்ளனர்.திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பின்னலாடை தொழில் அதிபர்கள், நில ஜமீன்கள், நிதி நிறுவன உரிமையாளர்கள், வர்த்தக பிரமுகர்கள் ஏராளமாக உள்ளனர். தங்களின் பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்துக்கொள்ள காவல் துறை உயர் அதிகாரிகளிடம் முறையாக விண்ணப்பி–்த்து தகுதியான நபர்களுக்கு மட்டும் காவல்துறை துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி சான்று வழங்குகிறது. திருப்பூர் மாவட்டம் முழுவதும் 613 பேர் துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் பெற்றுள்ளனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து துப்பாக்கி வைத்துள்ளோர் போலீசில் ஒப்படைக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. இதைதொடர்ந்து திருப்பூர் மாவட்ட போலீஸ் எல்லைகளுக்கு உட்பட்ட பகுதியில் துப்பாக்கி உரிமம் பெற்றுள்ள 396 பேரும், மாநகரில், 30 பேரும் என 426 பேர் தங்களது துப்பாக்கிகளை அந்தந்த போலீஸ் ஸ்டேஷன்களில் ஒப்படைத்துள்ளனர். இது வரை துப்பாக்கிகளை ஒப்படைக்காதவர்கள் விரைவில் காவல்நிலையங்களில் ஒப்படைக்க திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்ட காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.
காங்கயம், மார்ச்19: மகாதமா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை பார்க்கும் பெண்களுக்கு கடந்த இரண்டு மாத காலமாக சம்பளம் வழங்கவில்லை என கூறி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு மனு கொடுத்தனர் .காங்கயம் ஒன்றியம், சிவன்மலை ஊராட்சியில் உள்ள சிவன்மலை, கோவில் பாளையம், ராமபட்டினம், குருக்கத்தி ஆகிய பகுதிகளில் இருந்து 100 நாள் வேலைத்திட்டத்தில் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு இரண்டு மாத காலமாக ஊதியம் தரப்படவில்லை. இது குறித்து ஊராட்சி மன்றஅலுவலகத்தில் கேட்டபோது முறையான பதில் அளிக்கப்படாததால் அப்பகுதியைச் சேர்ந்த 100 நாள் வேலை திட்ட பயனாளிகள் நேற்று 50க்கும் மேற்பட்டோர் காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் வேலைக்கான அட்டைகளையும் வாங்கி வைத்து கொண்டனர். வேலை செய்தாலும் அதில் பதிவு செய்வதில்லை. ஆனால் வேலைக்கே செல்லாதவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது என புகார் தெரிவித்தனர். பின்பு வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷிடம் மனு ஒன்றிய கொடுத்தனர்.அந்த மனுவில் கூறியுள்ளதாவது: சிவன்மலை ஊராட்சியில் சுமார் 1200 பயனாளிகள் நூறு நாள் வேலை திட்டத்தில் உள்ளோம். இதில் 50க்கும் மேற்பட்ட பெண்களுக்கு கடந்த இரண்டு மாத காலமாக சம்பளம் கொடுக்கப்படவில்லை. இதனால் குடும்பச்செலவிற்கு மிகவும் சிரமப்படுகிராம். இதுபற்றி சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலரை அணுகி பலமுறை கேட்டுள்ளோம். ஆனால் எங்களுக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. எனவே, பாதிக்கப்பட்ட எங்களுக்கு உடனடியாக சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மனுவை பெற்று கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர், இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதை தொடர்ந்து பெண்கள் கலைந்து சென்றனர்.