திருமண மண்டபங்களில் அரசியல் கட்சி கொடி கட்டக்கூடாது

திருப்பூர்,மார்ச்19: மக்களவை தேர்தலை முன்னிட்டு திருமண மண்டபங்களில் அரசியல் கட்சி கொடிகளை கட்டக்கூடாது என தேர்தல் அலுவலர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.மக்களவை தேர்தல் தொடர்பாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபங்களின் உரிமையாளர்கள் மற்றும் அச்சக உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பான கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. இதில் கூறப்பட்ட

திருமண மண்டப உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் வரும்மாறு : திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபங்களில் தனி நபர்களால் திருமணம் நிகழ்ச்சிகளுக்கு தேர்தல் முடியும் வரை முன்பதிவு செய்யப்பட்ட விவரங்களை சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், வட்டாட்சியர்கள் மற்றும் போலீசாருக்கு எழுத்து பூர்வமாக சம்பந்தப்பட்ட திருமண அழைப்பிதழ் நகல்களுடன் உடனடியாக அளிக்க வேண்டும்.

திருமண மண்டபங்களில் அரசியல் கட்சியினரால் வாக்காளர்களுக்கு விருந்தளித்தல், பரிசு பொருட்கள் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்கக்கூடாது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுவது தெரியவந்தால் உரிமையாளர்கள் மீதும், சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினர் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

திருமண மண்டபங்களில் அன்னதானம் என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்துவதற்கும் அனுமதிக்ககூடாது. திருமண நிகழ்ச்சிகளின் போது அரசியல் கட்சித்தலைவர்கள், கட்சி சின்னங்கள், கட்சி கொடிகள் ஆகியவற்றுடன் கூடிய விளம்பர பேனர்கள் மற்றும் கொடிகள் ஆகியவற்றை திருமண மண்டபங்களில் வைப்பதற்கு அனுமதிக்கக்கூடாது. அவ்வாறு இருப்பது கண்டறியப்பட்டால், நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அச்சக உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் வரும்மாறு: அச்சக உரிமையாளர்கள் தாங்கள் அச்சிடும் துண்டு பிரசுரங்கள், போஸ்டர்கள், விளம்பரங்களில் தங்களது அச்சகத்தின் பெயர் மற்றும் முகவரி விளம்பரம் வெளியிடுவோரின் பெயர் மற்றும் முகவரி, வெளியிடப்படும் விளம்பரத்தின் பிரதிகளின் எண்ணிக்கை ஆகியவற்றை தவறாமல் அச்சிட வேண்டும். அச்சிடப்படும் துண்டு பிரசுரங்கள், விளம்பரங்கள் போஸ்டர்களில் அச்சுப்பதிக்கப்பட்ட பத்து நகல்களை 1951ம் வருடத்திய மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 127-ஏ (2) தெரிவித்தவாறு வெளியிடுபவரின் உறுதிமொழியுடன் மாவட்ட தேர்தல் அலுவலருக்கு அச்சிடப்பட்ட மூன்று தினங்களுக்குள் அனுப்பி வைக்க வேண்டும். அச்சிடப்படும் துண்டு பிரசுரங்கள், விளம்பரங்கள் போஸ்டர்கள் ஒரு பிரதி மற்றும் எண்ணிக்கை விவரங்களை தங்கள் அலுவலகத்தில் பராமரித்து வர வேண்டும். இது தொடர்பாக அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்களுக்கு அளிக்கப்பட்ட ரசீதுகளின் பிரதியை பராமரிக்க வேண்டும்.

அச்சிடப்படும் துண்டு பிரசுரங்கள் விளம்பரங்கள் போஸ்டர்கள் வேட்பாளரின் அனுமதி பெற்ற பின்னர் அல்லது அவருடைய கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் அச்சிடப்பட வேண்டும்.

தவறினால் இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 171-ஹெச்- இன் கீழ் அச்சிட்டோர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  அச்சடிக்கப்படும் துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகள், விளம்பரங்கள் ஆகியவற்றில் சாதி, மொழி, இன அடிப்படையில் விமர்சிக்கும் வாசகங்கள் இருக்ககக்டாது. தனி நபர்களை இழிவு படுத்தக்கூடிய அல்லது விமர்சனம் செய்யக்கூடிய பிரசுரங்களை அச்சிடக்கூடாது.  இத்தகைய நடைமுறைகளை மீறும் பட்சத்தில் தேர்தல் நடத்தை விதிகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தேர்தல் அலுவலர் பழனிச்சாமி தெரிவித்தார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர், தேர்தல் தனி வட்டாட்சியர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: