கோபி, மார்ச் 19: அதிமுக எம்.பி.,சத்தியபாமா கட்சியை விட்டு விலகியதாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த மக்களவை தேர்தலில் திருப்பூர் தொகுதியில் அதிமுகவை சேர்ந்த சத்தியபாமா வெற்றி பெற்றார்.ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் அதிமுக ஓ.பி.எஸ்.அணி, எடப்பாடி அணியாக பிரிந்த போது, சத்தியபாமா ஓ.பி.எஸ். அணியில் இருந்தார். இந்த முறையும் மக்களவை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புக்காக காத்திருந்தார். ஆனால் அதிமுக சார்பில் போட்டியிட திருப்பூர் எம்.எஸ்.ஆனந்தனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதனால் சத்தியபாமா ஏமாற்றம் அடைந்தார். இந்நிலையில் நேற்று காலை முதலே சத்தியபாமா அதிமுகவில் இருந்து விலகிவிட்டதாக தகவல் பரவியது. மேலும் இரண்டு மூத்த அமைச்சர்கள் அவரிடம் பேச்சுநடத்தியதாகவும் தகவல் வெளியானது. இதுகுறித்து எம்.பி., சத்தியபாமாவிடம் கேட்ட போது, ‘அதிமுகவில் இருந்து விலகி விட்டதாக வெளியான தகவல் முற்றிலும் பொய்யானது. ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட நான் கட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதற்காக வெளியேறியதாக கூறப்படுவது தவறான தகவல். கட்சி பணியில் முழுமையாக ஈடுபட்டு தான் வருகிறேன்’ என்றார்.