தர்மபுரி, மார்ச் 19: தேர்தலின் போது, வேட்பாளர்கள் பிரசார வாகனங்கள் பயன்படுத்துவது தொடர்பான கட்டுப்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை, அனைத்து கட்சிகளும் அறிவித்து விட்டன. இதையடுத்து முதல் கட்ட பிரசாரம் துவங்க உள்ளது. இந்நிலையில், பிரசாரத்தின் போது வாகனங்கள் பயன்படுத்துவது குறித்து தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதன்படி, பிரசாரங்களுக்கு வாகனங்களை பயன்படுத்தும் வேட்பாளர், அதற்கான உரிய அனுமதியை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பெற்று பயன்படுத்தலாம். வாகன அனுமதி கோரும்போது, வட்டார போக்குவரத்து அலுவலரின் பரிந்துரையைப் பெற்று, வாகனத்தின் பதிவுச்சான்று மற்றும் காப்பீட்டுக்கான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு வேட்பாளர் எத்தனை வாகனங்களுக்கு வேண்டுமானாலும் அனுமதி பெறலாம். தேர்தல் நடத்தும் அலுவலரால் வழங்கப்படும் அனுமதி சீட்டினை, வாகனத்தின் முன்புற கண்ணாடியில் ஒட்ட வேண்டும். நகல் பிரதியை ஒட்டக் கூடாது. பிரசார வாகனங்களில், கட்சிக்கொடி பயன்படுத்துவதையும் அனுமதி கோரும் மனுவில் குறிப்பிட வேண்டும். அதேபோல், தோழமைக் கட்சிகளின் கொடியை வாகனத்தில் பயன்படுத்தவும் அனுமதி பெற வேண்டும். பிரசார வாகனத்தில் ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கும், வாகன அமைப்பில் மாற்றம் செய்வதற்கும் உரிய அனுமதி பெற வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.