நாங்குநேரி, மார்ச் 19: நாகர்கோவிலில் இருந்து பெங்களூருக்கு எக்ஸ்பிரஸ் ரயில், நேற்றிரவு சென்று கொண்டிருந்தது. 8 மணியளவில் நாங்குநேரி ரயில் நிலையம் அருகே வந்தபோது, தண்டவாளங்களுக்கு இடையே பெண் உடல் சிதைந்து கிடப்பதை பார்த்து ஓட்டுநர் ரயிலை நிறுத்தினார். உடனடியாக நாங்குநேரி ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரயில்வே ஊழியர்கள் மற்றும் நாங்குநேரி போலீசார் விரைந்து சென்றனர். தலை சிதைந்த நிலையில் இறந்த கிடந்த பெண்ணுக்கு சுமார் 45 வயது இருக்கும் எனத் தெரிகிறது. 5 அடி உயரம் கொண்ட அவர் கரும்பச்சை நிற சேலையும், பச்சை நிற சட்டையும் அணிந்திருந்தார். ஒரு கவரில் பணமும் கிடந்தது. முகம் சிதைந்திருந்ததால் அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது. ரயில்வே ஊழியர்கள், பெண் உடலை தண்டவாளத்தில் இருந்து வெளியே எடுத்து போட்டனர். அதன் பிறகே ரயில் புறப்பட்டு சென்றது.