டிரான்ஸ்பார்மர் மின் கம்பங்கள் பழுது சீரமைக்க பள்ளிவிடை பகுதி மக்கள் கோரிக்கை

மண்ணச்சநல்லூர், மார்ச் 19:  மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பள்ளிவிடை பகுதியில் சாலையோரம் உள்ள டிரான்ஸ்பார்மரில் இரண்டு மின்கம்பங்களும் பழுதடைந்துள்ளதால் உடனடியாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மண்ணச்சநல்லூர் அருகே உள்ள மாடகுடி பஞ்சாயத்திற்க்குட்பட்ட 2வது வார்டு பள்ளிவிடை பகுதியில் 750 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் சாலையோரம் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகள் ஆனநிலையில் இதில் உள்ள மின் கம்பங்களில் கான்கிரீட் உதிர்ந்து கம்பிகள் வெளியில் தெரிகிறது. இதனால் எந்த நேரமும் டிரான்ஸ்பாரம் கீழே விழும் அபாய நிலையில் உள்ளது. அதே பகுதியில் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் நலன்கருதி புதிய மின்கம்பங்கள் நட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பள்ளிவிடை பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (72) கூறும்போது, இந்த மின்மாற்றி அமைக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டதால் தற்போது சிமென்ட் பெயர்ந்து வெறும் கம்பி மட்டுமே உள்ளது. இதுகுறித்து சமயபுரம் மின் வாரிய அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எந்த நேரத்திலும் மின்கம்பம் வலுவிழந்து மின்மாற்றி கீழே விழுந்து  விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் முன்பாக அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Related Stories: