திருச்சி, மார்ச் 19: மணப்பாறையில் புதுக்கோட்டை சாலையில் அரசு பொது மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு மணப்பாறை பகுதியைச்சுற்றியுள்ள பல்வேறு ஊராட்சி கிராமங்களை சேர்ந்த ஏழை, எளியோர், சிகிச்சை பெற்று வருகின்றனர். மணப்பாறை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கும் கிராமப்புற பெண்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினமும் 100க்கணக்கான கர்ப்பிணிகள் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு வந்து செல்கின்றனர். கர்ப்பிணிகளின் குழந்தையின் வளர்ச்சி மற்றும் உடல்நிலை குறித்து அரிய அவர்களுக்கு வயிறு பகுதியை ஸ்கேன் செய்து மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளிப்பது வழக்கம். 9 மாத கர்ப்பிணிகளுக்கு குழந்தைகள் வளர்ச்சியை துல்லியமாக கணித்து சிகிச்சை அளிப்பதற்கு இந்த ஸ்கேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனால் சுகப்பிரசவம் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் மணப்பாறைஅரசு மருத்துவமனையில் ஸ்கேன் இயந்திரம் பழுதடைந்து ஒரு வாரம் கடந்த நிலையிலும் அது சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் தற்போது சிகிச்சைக்கு செல்லும் கர்ப்பிணிகளுக்கு மருத்துவர்கள் ஸ்கேன் செய்யாமலேயே சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் அங்குள்ள மருத்துவ செவிலியர்கள் கர்ப்பிணிகளிடம் ஸ்கேன் பழுதாகிவிட்டது. எனவே வெளியில் ஸ்கேன் எடுத்து வரும்படி அனுப்புகின்றனர்.