கோடை வெயிலில் இருந்து தப்பிக்க நண்பகல் 12 முதல் மாலை 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் பொதுமக்களுக்கு அறிவுரை

தஞ்சை, மார்ச் 19: கோடை வெயில் மற்றும் அனல் காற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டுமென பொதுமக்களுக்கு கலெக்டர் அண்ணாதுரை அறிவுரை வழங்கியுள்ளார். இதுகுறித்து தஞ்சை கலெக்டர் அண்ணாதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோடை வெப்பத்திலிருந்து தற்காத்து கொள்ள தாகம் ஏற்படாவிட்டாலும்கூட போதுமான தண்ணீரை போதிய இடைவெளி விட்டு பருகி வர வேண்டும். உடலில் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்க இளநீர், லஸ்சி, அரிசிக்கஞ்சி, எலுமிச்சைச்சாறு, மோர் போன்ற பானங்களை பருக வேண்டும். தவிர்க்க இயலாத சூழ்நிலையில் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டியிருப்பின் வெளிர் நிறமுள்ள காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிந்து செல்ல வேண்டும். கண்ணாடி மற்றும் காலணி அணிந்து குடையின் பாதுகாப்புடன் செல்ல வேண்டும். வீட்டில் திரைச்சீலைகள், தடுப்புகள் மூலமாகவோ இரவு நேரங்களில் ஜன்னல்களை திறந்து வைத்தோ வீட்டை குளுமையாக வைத்திக்க வேண்டும். மிக கடுமையான வேலைகளை இந்த நாட்களில் குளுமையான நேரத்தில் மேற்கொள்ள திட்டமிட வேண்டும். பணிக்கு வரும் கருவுற்ற பெண்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட நிலையில் உள்ள பணியாளர்கள் குறித்து தனிக்கவனத்துடன் இருக்க வேண்டும்.

புறவெளியில் பணிகள் மேற்கொள்ளும்போது சிறிய இடைவெளியில் அதிகமான ஓய்வு வழங்கும் வகையில் பணிநேரத்தில் மாற்றம் செய்ய வேண்டும். கால்நடைகளுக்கு போதிய நிழல் அமைத்து வசதி செய்து கொடுப்பதோடு அவசியமாக குடிக்க தண்ணீர் கொடுக்கவும் வசதி செய்ய வேண்டும். நண்பகல் 12 முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை திறந்த வெளியில் விளையாடுவதை தவிர்க்க வேண்டும். திறந்த வெளியில் கடுமையான உடலுழைப்பை தேவைப்படும் பணிகளை நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். காபி, டீ மற்றும் மதுபானங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். உடல் சோர்வு, தலை சுற்றல், கிறுகிறுப்பு, தலைவலி, குமட்டல் மற்றும் வாந்தி, உடலில் இருந்து கூடுதலான வியர்வை வெளிபடுதல், வலிப்பு, அடர்த்தியான மஞ்சள் அல்லது ஆரஞ்ச் கலரில் வெளியேறும் சிறுநீர் போன்ற அறிகுறி அல்லது வேறு உடல் உபாதைகள் இருப்பின் உடனடியாக மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும். இவ்வாறு கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

Related Stories: