×

ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்களை வளர்த்தால் கடும் நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

தஞ்சை, மார்ச் 19: தஞ்சை மாவட்டத்தில் ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்களை வளர்ப்பது மற்றும் விற்பனை செய்வது கண்டறிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தஞ்சை கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்திருப்பதாவது: தஞ்சை மாவட்டத்தில் விவசாயத்துக்கு அடுத்த பிரதான தொழிலாக உள்நாட்டு மீன் வளர்ப்பு உள்ளது. உள்நாட்டு மீன் வளர்ப்பில் இந்திய பெருங்கெண்டை மீன் வகைகளான கட்லா, ரோகு, மிர்கால் மற்றும் சீனப்பெருங்கெண்டை மீன் வகைகளான வெள்ளி கெண்டை, புல் கெண்டை, சாதா கெண்டை மேலும் மரபியல் மேம்படுத்தப்பட்ட வளர்ப்பு திலேப்பியா மற்றும் கொடுவா மீன் குஞ்சுகளை தேர்வு செய்து விவசாயிகள் மீன் வளர்ப்பு பணி மேற்கொண்டு உரிய வருவாயை ஈட்டி வருகின்றனர். மத்திய மற்றும் மாநில அரசுகளால் ஆப்பிரிக்கா ரக கெளுத்தி மீன்கள் வளர்ப்பது மற்றும் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. இம்மீன் இனங்கள் மற்ற மீன்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்களை அதிதீவிரமாக இரையாக உண்ணும் தன்மை உடையதால் நமது பாரம்பரிய மீன்கள் மற்றும் வளர்ப்பு மீன்களையும் அவற்றின் முட்டைகளையும் முற்றிலுமாக அழித்துவிடும். எனவே நீர்நிலைகளில் உள்ள அனைத்து பாரம்பரிய நீர்வாழ் உயிரினங்களும் அழியும் வாய்ப்புள்ளது. மேலும் இம்மீன் இனங்கள் காற்றில் உள்ள பிராணவாயுவை சுவாசிக்கும் தன்மையும் மற்றும் மிக குறைந்த ஆழமுள்ள நீர்நிலைகளிலும் இனப்பெருக்கம் செய்யும் தன்மையுடையது.

இந்த மீன்கள் பாரம்பரிய உள்நாட்டு கெளுத்தி மீன்களுடன் இனப்பெருக்கம் மேற்கொண்டு அவற்றின் மரபியலை சிதைத்து ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்கள் பெருக்கமடைய வல்லமையுடையது. மேலும் மழை, பெருவெள்ள காலங்களில் இம்மீன் இனங்கள் வளரும் குளங்களில் இருந்து தப்பி வெளியேற வாய்ப்புள்ளது. இவ்வாறு தப்பித்து செல்லும் மீன்கள் உள்நாட்டு நீர்நிலைகளில் மற்ற பாரம்பரிய மீன்களை முற்றிலும் அழித்து பல்பெருக்கமடைந்து ஒருகால கட்டத்தில் அனைத்து நீர்நிலைகளிலும் ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்களை தவிர பிற மீன்கள் இல்லாமல் உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். எனவே மத்திய மற்றும் மாநில அரசுகளால் தடை செய்யப்பட்டுள்ள ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்களை வளர்ப்பது மற்றும் விற்பனை செய்வது தொடர்பான புகார்கள் ஏதேனும் பெறப்பட்டால் அம்மீன்களை முற்றிலும் அழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் பொதுமக்களும் இவ்வகை மீன்களை கொள்முதல் செய்ய வேண்டாம். இவ்வாறு கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

Tags : District Administration ,African ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் தபால் வாக்கு செலுத்தினர்