பெரியகுளம், மார்ச் 19: பெரியகுளம் அருகே விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார். மேலும் ஒருவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். பெரியகுளம் அருகே சருத்திபட்டி வசந்த் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார்(42). இவரது மகன் அழகுமுருகன்(21) பெரியகுளம் அருகே மேரிமாதா கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் சோத்துப்பாறை அணைப்பகுதிக்கு நண்பர்களுடன் டூவீலரில் சுற்றுலா சென்றுள்ளார். வாகனத்தை அழகுமுருகனின் நண்பர் கெங்குவார்பட்டியை சேர்ந்த ஆதிமுலத்தின் மகன் சூர்யா(21) ஓட்டி வந்துள்ளார்.
சோத்துப்பாறை அணையிலிருந்து திரும்பும்போது பாலம் பராமரிப்பிற்காக வைத்திருந்த எச்சரிக்கை போர்டை பார்க்காமல் அதிவேகமாக மஞ்சள்துறை வாய்க்காலுக்குள் வண்டியுடன் விழுந்ததில் அழகுமுருகன் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இடுப்பில் பலத்த காயமடைந்த சூர்யா பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.