மதுரை, மார்ச் 19: கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் இடத்தில் தற்காலிக பாலம் அமைக்கும் பணிகள் மாநகராட்சி சார்பில் நடந்து வருகிறது.அழகர்மலையில் கள்ளழகர் கோயிலில் இருந்து மதுரைக்கு அழகர் ஏப். 17ம் தேதி மாலை தங்கப்பல்லக்கில் புறப்படுகிறார். அவரை வரவேற்க 400க்கும் மேற்பட்ட மண்டபங்கள் தயார்படுத்தப்பட்டு வருகிறது. அழகர்கோயிலின் முக்கிய திருவிழாவான சித்திரைப்பெருந்திருவிழா ஏப்.16ம் தேதி தொடங்கிறது. ஏப்.17ம் தேதி இரவு 7 மணிக்கு 18ம் படி கருப்பணசுவாமி கோயில் முன்பு, வையாழியாகி தங்கப்பல்லக்கில் அழகர் மதுரை நோக்கி புறப்படுகிறார். வழியில் உள்ள கள்ளந்திரி, அப்பன்திருப்பதி மண்டபங்களில் எழுந்தருள்கிறார். ஏப். 18ம் தேதி அதிகாலை 4 மணிக்கு மூன்றுமாவடியில் பக்தர்கள் எதிர்சேவை செய்து அழகரை வரவேற்பார்கள். வழியில் உள்ள அனைத்து மண்டபங்களிலும் அழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அன்றிரவு 12 மணிக்கு தல்லாகுளம் பெருமாள் கோயிலில், திருவில்லிபுத்தூர் ஆண்டாளுடைய திருமாலை அணிந்து வெட்டிவேர் சப்பரத்தில் சுவாமி எழுந்தருளுவார். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, ஏப்.19ம் தேதி அன்று தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி வைகை ஆற்றில் காலையில் இறங்குகிறார்.
இந்த நிகழ்ச்சிக்காக மதிச்சியம் வைகை ஆற்றில் இறங்கும் இடத்தில் பாலம் உடைப்பு ஏற்பட்டு இருந்தது. இதனை சரி செய்து தற்காலிக பாலம் அமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது.இன்றைய நிகழ்ச்சிகள்(இனிய வாசகர்களே... இப்பகுதிக்கு அமைப்புகள், சங்கங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிக்கான செய்திகளை,’ இன்றைய நிகழ்ச்சிகள்’ , தினகரன் நாளிதழ், 2/2, மேலூர் மெயின்ரோடு, உத்தங்குடி, மதுரை- 625 107 முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்)