நாகை, மார்ச் 19: நெற்பயிருக்கான வறட்சி இழப்பீட்டு தொகையை விரைவில் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த மணிகிராமம் விதாநல்லூரை சேர்ந்த விவசாயிகள் நாகை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள புகார் பெட்டியில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 2016-17ம் ஆண்டுக்கான நெல் பயிருக்கான காப்பீடு தொகை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் செலுத்தி உள்ளோம். நெல் பயிருக்கான அரசின் நிவாரண தொகை, வறட்சிக்கான இழப்பீட்டு தொகை, முழு பாதிப்புக்கான இன்சூரன்ஸ் இழப்பிட்டு தொகை நியு இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி தொடக்க வேளாண்மை வங்கி மூலம் உடன் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் விவசாயிகள் கூறி சுமார் 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் தனித் தனி மனுவாக புகார் பெட்டியில் போட்டனர். நேற்று திங்கள் கிழமை மனு நீதி நாள் முகாம் என்று கலெக்டரிடம் நேரடியாக வழங்க வந்தவர்கள் தேர்தல் நடத்தை விதி முறையால் கலெக்டர் அலுவலக வாசலில் வைக்கப்பட்டிருந்த புகார் பெட்டியில் போட்டு விட்டு சென்றனர்.