பங்குனி உத்திர திருவிழா போலீஸ் கட்டுப்பாட்டில் நாளை முதல் பழநி நகரம்

பழநி, மார்ச் 19: பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நாளை முதல் பழநி நகரம் போலீஸ் கட்டுப்பாட்டிற்கு செல்கிறது.பழநி கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான பங்குனி உத்திர திருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றதுடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை மறுதினம் (மார்ச் 21) நடக்க உள்ளது. இதையொட்டி தற்போதே ஏராளமான பக்தர்கள் பழநி நகரை நோக்கி தீர்த்தக்காவடியுடன் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். இதனால் ஏரளாமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது, ‘டிஐஜி தலைமையில் 2 எஸ்பிக்கள், 15 டிஎஸ்பிக்கள் உள்ளிட்ட 1,500 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 30 மாவட்டங்களில் இருந்தும் குற்றப்பிரிவு போலீசார் குற்றவாளிகள் பட்டியலுடன் வரவழைக்கப்பட உள்ளனர்.

குழந்தை காணாமல் போனால் அறிவிப்பது, பக்தர்களின் சந்தேகத்தை தீர்க்க 26 இடங்களில் தகவல் மையம் ஏற்படுத்தப்பட உள்ளன. இங்கு 24 மணிநேரமும் 2 போலீசார் பணியில் இருப்பர். பாதயாத்திரை வழித்தடங்களான புதுதாராபுரம் சாலை, அலங்கியம் சாலை மற்றும் பூலாம்பட்டி சாலைகளில் 3 கிலோமீட்டருக்கு ஒரு பைக் என்ற விகிதத்தில் ரோந்துப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது. பக்தர்கள் கூட்டத்தில் 4 சக்கர வாகனங்களில் ரோந்து செல்ல முடியாது என்பதால் பைக் மூலம் ரோந்துப்பணி மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 7க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கிரிவீதி, மலைக்கோயில் பகுதிகளில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என்றனர்.

Related Stories: