திருவள்ளூர், மார்ச் 19: நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் தேர்தல் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி தொடர்ந்து ஒரு மாதம் நடக்கிறது. திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே நடந்த தேர்தல் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டு, வாக்கு பதிவு இயந்திரம் மற்றும் விவிபிஏடி இயந்திரங்கள் தொடர்பான விழிப்புணர்வு ரதத்தினை, மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கொடியசையத்து துவக்கி வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், ‘நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் 100 சதவிகிதம் வாக்குப்பதிவு அடைவதற்கு, வாக்காளர்களிடையே பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் (விவிபிஏடி) இயந்திரம் ஆகியவற்றை பொதுமக்களிடையே கொண்டு செல்வதற்காக ரதம் அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் செல்கிறது.
இந்த ரதம் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் இரண்டு நாட்கள் வீதம் ஒரு மாதம் முழுவதும் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் உள்ள வாக்காளர்களிடையே கொண்டு செல்லப்படுகிறது. மேலும், நாட்டுப்புற கிராமிய கலை குழுக்களைக் கொண்டு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளும் அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற உள்ளது’ என்றார். இந்நிகழ்ச்சியில் மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் ஜெயகுமார், நகராட்சி அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.