×

ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து நாடகம்


இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்ய மறுத்த சுகாதார ஆய்வாளர் கைது
திருவண்ணாமலை, மார்ச் 19: திருவண்ணாமலையில் இளம்பெண்ணை காதலித்துவிட்டு, திருமணம் செய்ய மறுத்த சுகாதார ஆய்வாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மதுரை மாவட்டம், தேனூர் கிராமத்தை சேர்ந்தவர் மதன்குமார்(36). இவர் கடந்த 2014ம் ஆண்டு முதல் திருவண்ணாமலை நகராட்சியில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். திருவண்ணாமலை கட்டபொம்மன் தெருவில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தனியாக வசித்து வருகிறார்.இந்நிலையில், கடந்த 2017ம் ஆண்டு மதன்குமாருக்கும், திருவண்ணாமலையை சேர்ந்த 23 வயது பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, இருவரும் காதலித்து வந்தனர். அடிக்கடி இருவரும் சந்தித்து வந்த நிலையில் மதன்குமார், இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, கட்டாயப்படுத்தி தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து இளம்பெண், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மதன்குமாரிடம் கூறினார். நீண்ட நாட்களாகியும் மதன்குமார் திருமணத்தை பற்றி பேசாமல் காலம் கடத்தி வந்தார்.இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் சந்தித்த இளம்பெண், திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தினார். ஆனால் மதன்குமார், திருமணம் செய்து கொள்ள முடியாது என மறுத்ததுடன், அவரை இழிவாக பேசியதாக கூறப்படுகிறது.இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சுகாதார ஆய்வாளர் மதன்குமாருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, ஒரு மகன் உள்ளதும், அவர்கள் மதுரையில் வசித்து வருவதும் தெரியவந்தது. மேலும், தனக்கு ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து, இளம்பெண்ணிடம் ஆசைவார்த்தை கூறி ஏமாற்றியது தெரிந்தது.இதையடுத்து, மதன்குமாரை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags :
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...