திருவொற்றியூர்: மணலி, மாத்தூர் அருகே மாதவரம் 200அடி சாலையில் புதிய சுங்கச்சாவடி, கடந்த மாதம் 20ம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. இதற்கு லாரி உரிமையாளர்கள், குடியிருப்போர் நலச் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த சுங்கச்சாவடியில் நேற்று காலையில் காஸ் ஏற்றி வந்த டேங்கர் லாரிகளுக்கு அங்கு பணிபுரியும் ஊழியர்கள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதலாக வசூலித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த டேங்கர் லாரி டிரைவர்கள், சுங்கச்சாவடி ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதை கண்டித்து, டிரைவர்கள் கோஷமிட்டனர்.