சென்னை: தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை என மூன்று நாடாளுமன்ற தொகுதிகள் வருகிறது. இதில் 170க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் பதற்றம் மற்றும் மிகவும் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, பதற்றமான வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில் தேர்தல் ஆணைய உத்தரவுப்படி துணை ராணுவ படையினர் கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர். அந்த வகையில், வாக்களிக்கும் பொதுமக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் திருவல்லிக்கேணி காவல் நிலையம் அருகே, துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையை சேர்ந்த 60 பேர் மற்றும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தை சேர்ந்த 3 இன்ஸ்ெபக்டர்கள் மற்றும் 20 காவலர்கள் இந்த கொடி அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.