குடிபோதையில் வீட்டிற்கு தீவைத்த வாலிபர் கைது

வானூர், மார்ச் 19: வானூர் தாலுகா ஆரோவில் அருகே உள்ள இரும்பை கிராமத்தை சேர்ந்தவர் பாபு(37). இவர் அடிக்கடி குடித்துவிட்டு தனது மனைவி கலைவாணியிடம் தகராறு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வந்த பாபு திடீரென வீட்டிற்கு தீவைத்துவிட்டு தலைமறைவாகிவிட்டார். இதில் அவரது வீடு எரிந்து சேதமானது. தீ மேலும் பரவி அருகில் இருந்த 2 கூரை வீடுகளுக்கும் பரவி எரிந்து சேதமானது. இதில் ராதா சுப்புராயன் என்பவரது வீடும் எரிந்தது. அவரது வீட்டில் மகள் திருமணத்திற்கு வைத்திருந்த ரூ.3 லட்சம் மற்றும் 15 பவுன் நகைகள் மற்றும் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சேதமானது. இந்த சம்பவம் குறித்து ஆரோவில் போலீசில் ராதா கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து பாபுவை தேடி வந்தனர். இந்நிலையில் கோட்டக்குப்பம் டி.எஸ்.பி அஜய்தங்கம் உத்தரவின்பேரில் போலீசார், பாபுவை கைது செய்தனர்.

Related Stories: