கள்ளக்குறிச்சி, மார்ச் 19: கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் மக்களவை தேர்தல் விதிமுறை குறித்து அனைத்து கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி மக்களவை தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் காந்த் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராமநாதன், வட்டாட்சியர் தயாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல துணை வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன் வரவேற்றார். கூட்டத்தில் டிஎஸ்பி ராமநாதன் பேசுகையில் நாளை (இன்று) 19ம் தேதி மனுதாக்கல் துவங்குகிறது. மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனுக்களை தாக்கல் செய்கின்றபோது ஒரு வேட்பாளருடன் 4 பேர்களுக்கு மட்டுமே உள்ளே அனுமதி அளிக்கப்படும். அரசியல் கட்சியினர் வாகனம் சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்னே 100 மீட்டர் தூரத்தில் நிறுத்த வேண்டும். வேட்பாளருடன் 3 வாகனத்திற்கு மட்டும் அலுவலகம் வரை செல்ல அனுமதிக்கப்படும்.