கன்னியாகுமரி, மார்ச் 19: தீவிரவாதிகள் கடல் வழியாக ஊடுருவதை தடுக்கவும், கடலோர பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், மாதந்தோறும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சஜாக் ஆபரேசன் என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தி வருகின்றனர். அதன்படி இந்த மாதத்துக்கான பாதுகாப்பு ஒத்திகை கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று அதிகாலை 5 மணி முதல் இரவு 7 மணி நடைபெற்றது. கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையில் போலீசார் அதி நவீன படகில் சின்னமுட்டம் கடல் பகுதியில் இருந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையில் நடைபெற்றது. கடலோர கிராமங்களிலும் விசாரணை நடந்தது. கடலோர சோதனை சாவடிகளில் போலீசார் நிறுத்தப்பட்டு வாகன சோதனையும் நடைபெற்றது. இந்த பாதுகாப்பு ஒத்திகையில் கடலோர பாதுகாப்பு குழு போலீசாருடன் உள்ளூர் போலீசாரும் ஈடுபட்டனர். இந்த நிலையில் கன்னியாகுமரியில் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக ரோந்து பணி நிறுத்தப்பட்டு, படகு கரை ஒதுக்கப்பட்டது. பின்னர் கடல் சீரானதும், மீண்டும் கண்காணிப்பு தொடர்ந்தது.