திருப்பூர், மார்ச் 15: கோவையை போல திருப்பூரில் சலுகை விலையில் மருத்துவ சேவை அமைப்பு துவங்க வேண்டும் என தொழில் அதிபர்களுக்கு தொழிலாளர்கள், சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவையில் கூலித்தொழிலாளர்கள், நடுத்தர மக்களின் மருத்துவ செலவை குறைக்கும் விதமாக சாந்தி சோஷியல் சர்வீஸ், சி.ஆர்.ஐ., ஆகிய நிறுவனங்கள் லாப நோக்குடன் இல்லாமல் சலுகை விலையில் மருத்துவசேவை வழங்குகின்றன. மருந்து வகைகள், சி.டி. ஸ்கேன், எக்ஸ்-ரே, ரத்த வகை கண்டறிதல், ரத்த அணுக்கள் கண்டறிதல் உட்பட அனைத்து பரிசோதனைகள் கொண்ட மருத்துவ சேவையை கடந்த சில ஆண்டுகளாக செய்து வருகின்றனர். திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பின்னலாடை நிறுவனங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.45 ஆயிரம் கோடி உள்நாட்டு, வெளிநாடுகளுக்கு ஆடைகளை ஏற்றுமதி செய்கின்றனர். ஒவ்வொரு நிறுவனங்களில் ஆயிரம் முதல் 3 ஆயிரம் தொழிலாளர்கள் வரை வேலை பார்க்கின்றனர். தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூர் மாநகரில் சலுகை விலையில் மருத்துவ சேவை இல்லாததால் கோவை சென்று மருத்துவம் பார்க்கின்றனர். இதனால், போக்குவரத்து செலவு, ஒரு நாள் வருமானம் இழப்பு என பொருளாதார ரீதியாக தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். திருப்பூரில் உள்ள சேவை மனப்பான்மையுள்ள பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் ஏழை, எளிய கூலித்தொழிலாளர்களின் நலன் கருதி திருப்பூரில் சலுகை விலையில் மருந்து வகைகள், சி.டி.ஸ்கேன், எக்ஸ்-ரே, உள்ளிட்ட பல்வேறு பரிசோதனை கருவிகளை உள்ளடக்கிய மருத்துவ சேவை நிறுவனத்தை துவங்க வேண்டுமென தொழிலாளர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.