×

சேலம், நாமக்கல்லில் தேர்தல் வாகன தணிக்கை டாக்டர், வாலிபர்களிடம் ₹7 லட்சம் பறிமுதல்

சேலம், மார்ச் 15:நாடாளுமன்ற தேர்தலையொட்டி, மாநிலம் முழுவதும் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஓட்டுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தவிர்க்க பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வரும் சோதனையில், லட்சக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் தலா 3 பறக்கும் படை, 3 நிலை கண்காணிப்பு குழுவினர் சோதனையிட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் வரை, ₹12.19 லட்சம் பணம், 15 கிலோ வெள்ளி பொருட்கள், எவல்சில்வர் பாத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று அதிகாலை, கருப்பூர் சுங்கச்சாவடி பகுதியில் நிலை கண்காணிப்பு குழுவினர், உதவி பொறியாளர் மணிகண்டன் தலைமையில் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். நள்ளிரவில் பெங்களூருவில் இருந்து வந்த ஒரு சொகுசு பஸ்சை சோதனையிட்ட போது, அதில் வந்த பயணி சந்தோஷ் (32) என்பவர் எவ்வித ஆவணங்களும் இன்றி ₹1.30 லட்சம் வைத்திருந்தது கண்டறியப்பட்டது. அந்த பணத்தை நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர். பணம் எடுத்து வந்த சந்தோஷ், பெங்களூருவில் இருந்து செங்கோட்டைக்கு சென்றது தெரியவந்தது. தொடர் சோதனையில், ஒரு காரில் மதுபாட்டில்கள் எடுத்து வந்தது கண்டறியப்பட்டது. அதில், 10 பாட்டில் பீர், 10 குவார்ட்டர் பாட்டில்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதேபோல் சீலநாயக்கன்பட்டி பை-பாஸ் சாலையில், வேளாண் துறை அதிகாரி ராஜாமணி தலைமையிலான பறக்கும் படையினர், நேற்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்ட போது, ₹1.72 லட்சம் இருந்தது கண்டறியப்பட்டது.

விசாரணையில் காரில் வந்தவர், சீலநாயக்கன்பட்டி அண்ணாமலை நகரை சேர்ந்த டாக்டர் தினேஷ்குமார் என்பதும், தனது குழந்தைக்கு கல்வி கட்டணம் செலுத்த பள்ளிக்கு பணத்தை கொண்டு சென்றதும் தெரியவந்தது. ஆனால், உரிய ஆவணம் இல்லாததால், பணம் பறிமுதல் செய்யப்பட்டு உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான மாநகராட்சி கமிஷனர் சதீஷ் வசம் ஒப்படைக்கப்பட்டது. நேற்று ஒரே நாளில், சேலத்தில் ₹3.02 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் உத்திரகிடிக்காவல் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்(35). நேற்று இவர் ஓட்டி வந்த லாரியை, நாமக்கல் முதலைப்பட்டி பைபாஸ் சாலை அருகே தேர்தல் பறக்கும் படையினர் நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் ₹2 லட்சத்து 8 ஆயிரம் பணம் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. அதை அதிகாரிகள் பறிமுதல் செய்து, நாமக்கல் சப் கலெக்டர் கிரந்திகுமார்பதியிடம் ஒப்படைத்தனர். இந்த வகையில் சேலம், நாமக்கல்லில் நேற்று நடந்த வாகன தணிக்கையில் ₹5.8லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  காண்ட்ராக்டரிடம் ₹1.20 லட்சம் பறிமுதல் வீராணம் மெயின்ரோட்டில், நேற்று பறக்கும்படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது  ஏற்காட்டில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, அந்த காரில் ₹1.20 லட்சம் இருந்தது. இதனை கொண்டு வந்த ராஜ்மோகன் என்பவரிடம் விசாரணை நடத்தினர். அவர் கட்டிட காண்ட்ராக்டராக இருப்பதாக தெரிவித்தார். ஆனால், அவரிடம் முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாததால், பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வெள்ளிக்கட்டி என்று கூறி 222 கிலோ துத்தநாகம் பறிமுதல்
சேலம் கருப்பூர் சுங்கச்சாவடியில் சோதனையில் ஈடுபட்டிருந்த நிலை கண்காணிப்பு குழுவினர், அவ்வழியாக வந்த பெங்களூரு-ராமேஸ்வரம் தனியார் சொகுசு பஸ்சில் தீவிரமாக சோதனையிட்டனர். அதில், பெரிய பார்சல் ஒன்று இருந்தது. பார்சலில் பெங்களூருவில் இருந்து காரைக்குடிக்கு செல்வதாக எழுதப்பட்டிருந்தது. அதனை பிரித்து பார்த்தபோது, 222 கிலோ எடையில் வெள்ளிக்கட்டி போன்று உலோகம் இருந்தது. அதை பறிமுதல் செய்து கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். அது வெள்ளி தானா? என ஆய்வு செய்தபோது, வெள்ளி கொலுசு தயாரிக்க பயன்படுத்தும் உப பொருளான துத்தநாகம் என்பதும், இதன் மதிப்பு ₹54 ஆயிரம் என்பதும் தெரியவந்தது. இதுதொடர்பாக பஸ் டிரைவர் கண்ணையா மூலம் பார்சல் அனுப்பிய நபரிடம், உரிய ஆவணங்களை காண்பித்து பெற்றுக்கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Seal ,Namakkal ,
× RELATED வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு அசோலா தீவன உற்பத்தி குறித்து செயல் விளக்கம்