நாமக்கல், மார்ச் 15: சட்டீஸ்கர் மாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு 25 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் கடத்தி சென்ற டேங்கர் லாரியை, நாமக்கல் கீரம்பூரில் மதுவிலக்கு போலீசார் பிடித்தனர். இதையடுத்து செங்கல்பட்டை சேர்ந்த டிரைவர் தனதேவன்(55) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான திருப்பூர் மாவட்டம் நாச்சிபாளையத்தை சேர்ந்த மர வியாபாரி நாகராஜன்(47) என்பவரை போலீசார் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அவர் மீது எரிசாராயம் கடத்தியதாக, ஏற்கனவே வழக்கு நிலுவையில் இருப்பதால் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட எஸ்பி அருளரசு, கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் கலெக்டர் ஆசியா மரியம், நாகராஜனை குண்டர் சட்டத்தில், ஒரு ஆண்டு சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.