கிருஷ்ணகிரி, மார்ச் 15: கிருஷ்ணகிரி அருகே பஸ்சுக்காக காத்திருந்தபோது பள்ளி ஆசிரியையிடம் 2 பவுன் நகையை திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி, சோமார்பேட்டை, அதியமான்நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் மனைவி அனிதா(40). போச்சம்பள்ளியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வரும் இவர், நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் பள்ளிக்கு புறப்பட்டார். இத்றகாக கிருஷ்ணகிரி-சேலம் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது, அவர் வைத்திருந்த கைப்பை அசைவது போல் தெரிந்தது. சந்தேகமடைந்த அனிதா கைப்பையை பார்த்தபோது, திறந்திருந்தது. அதில் வைத்திருந்த 2 பவுன் தங்க நகை மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், அப்பகுதியில் உள்ளவர்களிடம் விசாரித்து பார்த்தார். ஆனால், நகை கிடைக்க வில்லை. பஸ்சுக்காக காத்திருந்த கூட்டத்தை பயன்படுத்தி ஆசிரியை அனிதாவிடம் மர்ம ஆசாமிகள் நகையை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், கிருஷ்ணகிரி டவுன் போலீசார், வழக்குப்பதிந்து அனிதாவிடம் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். பஸ்சுக்காக காத்திருந்த பள்ளி ஆசிரியையிடம் நகை திருடப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.