சிவகாசி, மார்ச் 15: சிவகாசி தாலுகா அலுவலகத்தில் ஓட்டு இயந்திரங்களை கையாள்வது குறித்து மண்டல தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. சிவகாசி தொகுதியில் மண்டல தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு இயந்திரங்களை கையாளுவது பற்றிய பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. சிவகாசி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமிற்கு ஆர்.டி.ஓ., தினகரன் தலைமை வகித்தார். மண்டல துணை தாசில்தார் சுந்தரபாரதி பயிற்சி அளித்தார். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை எப்படி கையாளுவது, திடீரென பழுதடைந்தால் எப்படி சரி செய்வது, ஒப்புகை சீட்டு தணிக்கை இயந்திரத்தை எப்படி பயன்படுத்துவது பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும் ஓட்டுச்சாவடி மையங்களுக்கு தேவையான பொருட்களை வழங்குவது குறித்தும், ஓட்டுப்பதிவு முடிந்த பிறகு அந்த பொருட்களை திரும்ப பெறுவது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. 20 மண்டலங்களிலிருந்து 50 பேர் கலந்து கொண்டனர்.
ஒவ்வாருவரும் இயந்திரங்களை இயக்கி சோதனை செய்து கொண்டனர். சிவகாசி தாசில்தார் ஸ்ரீதர், தேர்தல் தனித் துணை தாசில்தார் செந்தில் கலந்து கொண்டனர்.