தேனி, மார்ச். 15: தேனி மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி 127 மண்டல தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேனி பாராளுமன்றத் தொகுதி பொதுத்தேர்தல் மற்றும் பெரியகுளம், ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற ஏப்ரல் 18ம் தேதி நடக்க உள்ளது. தேனி பாராளுமன்றத் தொகுதியில் தேனி மாவட்டத்தில் மட்டும் ஆண்டிபட்டி, பெரியகுளம்(தனி),போடி, கம்பம் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. சட்டமன்றத் தொகுதி வாரியாக தேர்தல் ஆணையம் மண்டல தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இதன்படி, ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதிக்கு 33 மண்டல தேர்தல் அலுவலர்களும், பெரியகுளம்(தனி) சட்டமன்றத் தொகுதிக்கு 29 மண்டல தேர்தல் அலுவலர்களும், போடி சட்டமன்றத் தொகுதிக்கு 35 மண்டல தேர்தல் அலுவலர்களும், கம்பம் சட்டமன்றத் தொகுதிக்கு 30 மண்டல தேர்தல் அலுவலர்களுமாக தேனி மாவட்டத்தில் மொத்தம் 127 மண்டல தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.