×

விவசாயியை தாக்கிய நெல் வியாபாரி கைது

விருத்தாசலம், மார்ச் 15: விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் அருகேயுள்ள தேவங்குடியை சேர்ந்தவர் வீரமுத்து மகன் பாலகிருஷ்ணன் (48). இவர் விவசாயம் செய்து அறுவடை செய்த நெல்லை நெல் வியாபாரியான கம்மா புரத்தை சேர்ந்த அப்பாதுரை மகன் பன்னீர் (49) என்பவரிடம் ரூ.9 லட்சத்துக்கு விற்பனை செய்துள்ளார். இதில் ரூ.5 லட்சத்தை பன்னீரிடம் வாங்கிய நிலையில், மீதமுள்ள ரூ.4 லட்சத்தை பாலகிருஷ்ணன் கேட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 11ம் தேதி பாலகிருஷ்ணனும், பன்னீரும் கம்மாபுரம் டாஸ்மாக் கடையில் மதுகுடித்து கொண்டிருந்தனர். அப்போது நெல்லுக்கான பணத்தை பன்னீரிடம் பாலகிருஷ்ணன் கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பன்னீர் மற்றும் அவரது நண்பரான கம்மாபுரத்தை சேர்ந்த சொக்கநாதன் மகன் ஏழுமலை ஆகிய இருவரும் சேர்ந்து பாலகிருஷ்ணனை சரமாரியாக தாக்கியுள்ளனர். தொடர்ந்து பன்னீர், தான் வைத்திருந்த பீர்பாட்டிலால் பாலகிருஷ்ணனின் தலையில் உடைத்து, பீர் பாட்டிலால் அவரை குத்த முயற்சித்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கம்மாபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து பாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் கம்மாபுரம் போலீசார் பன்னீர் மற்றும் ஏழுமலை ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிந்து பன்னீரை கைது செய்தனர். ஏழுமலையை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED வாய்க்காலில் சடலமாக கிடந்த ஆண் சிசு