காரைக்குடி, மார்ச் 15: பாராளுமன்ற தேர்தலில் கட்சிகள் இன்னும் வேட்பாளர்களை அறிவித்து பணிகளை துவங்காத நிலையில் அமமுக கட்சியினர் ஆளும்கட்சி அதிருப்தியாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்துவது உள்பட பல பணிகளை துவக்கியுள்ளனர்.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வாக்குபதிவு ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது. வேட்பு மனு தாக்கல் வரும் 19ம் தேதி முதல் துவங்குகிறது. திமுக, அதிமுக போன்ற கட்சிகள் கூட்டணி அறிவித்து தொகுதிகளின் எண்ணிக்கை மட்டும் அறிவித்துள்ளனர். இன்னும் கூட்டணி கட்சிகளுக்கு போட்டியிடும் தொகுதிகள் குறித்து அறிவிக்கப்பட வில்லை.சிவகங்கை தொகுதியை பொறுத்தவரை திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படலாம், அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்படலாம் என கூறப்படுகிறது. இன்னும் தொகுதி முடிவாகாததால் கட்சிகள் தேர்தல் அலுவலகம் திறக்கவில்லை. பணிகளும் மேற்கொள்ளாமல் உள்ளனர்.
இந்நிலையில் அமமுக கட்சியி சார்பில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தேர்போகி பாண்டி வேட்பாளராக நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அக் கட்சியினர் தனது தேர்தல் பணிகளை துரிதப்படுத்தியுள்ளனர். காரைக்குடி கல்லூரி சாலையில் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. தவிர பாஜக விற்கு தொகுதி ஒதுக்கப்படும் என கூறப்படுவதால் ஆளும்கட்சி ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். இவர்களை சரி செய்து ஒவ்வொரு வார்டு வரியாக முக்கிய நிர்வாகிகளை அழைத்து பேசி வருகின்றனர். அதேபோல் ஆளும் கட்சியில் முக்கிய பதவிகளில் இருப்பவர்களால் பலி வாங்கப்பட்டவர்கள், பதவி பறிக்கப்பட்டவர்கள், பதவி கிடைக்கும் என காத்திருந்தும் பிற கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு கொடுத்துவிட்டு வேண்டும் என்றே ஓரம் கட்டப்பட்டவர்களை நேரில் சந்தித்து அதிருப்தியாளர்களை அரவணைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.