உடன்குடி,மார்ச் 15: மாவட்ட அளவிலான ஊரக திறனாய்வு தேர்வில் கீழராமசாமியாபுரம் பள்ளி மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டு தோறும் ஊரகத்திறனாய்வு தேர்வு நடந்து வருகிறது. இதில் முதல் ஐம்பது மதிப்பெண்கள் பெறும் மாணவ, மாணவியருக்கு ஆயிரம் ரூபாய் வீதம் நான்காண்டுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு நடந்த ஊரக திறனாய்வு தேர்வில் கீழராமசாமியாபுரம் புனித அன்னாள் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் இசக்கிமுத்து, ஜோசுவா இம்மானுவேல், ஷைனி பெனிட்டா ஆகியோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் ஜோசப் ரெத்னராஜ், தலைமை ஆசிரியை ரோஸ்லின், ஆசிரியர்கள் ஸ்டாலின், ராஜேஷ்வரி, ரகுராணி, ஜெஸிந்தாராணி, ஜோனி மற்றும் பெற்றோர்கள் ஊர்பொதுமக்கள் பாராட்டினர்.