உடன்குடி, மார்ச் 15: பொள்ளாச்சி பாலியல் சம்பவ வழக்கை விரைந்து நடத்தி குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாநில பொதுச்செயலர் முஹம்மது வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தை உலுக்கியுள்ள பொள்ளாச்சி சம்பவத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அபலைப்பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் பெண்களுக்கு ஏதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக கடந்த மாதம் வெளியான ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலங்கள் பட்டியலில் தமிழகமும் சேர்ந்துள்ளது கவலை தரக்கூடியது. இந்த கொடுஞ்செயலை செய்தவர்களுக்கு மரண தண்டனை வழங்குவது ஒன்றே பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கிடைக்கும் சிறிய ஆறுதல் ஆகும். இச்சம்பவங்களில் தொடர்புடையவர்கள் எத்தகைய பின்னணி கொண்டவர்களாக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனைக்குள்ளாக்கப்பட வேண்டும். மேலும் சமூக வலைதளங்களை பயன்படுத்தும் பருவ வயதினர்களை பெற்றோர் மிகவும் கவனமாக கையாள வேண்டும். கலாசார சீரழிவுகளில் தங்கள் பிள்ளைகள் வீழ்ந்து விடாதபடி பெற்றோர் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.