கோவை, மார்ச் 14:கோவையில், வெவ்வேறு இடங்களில் 5 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். கோவை மதுக்கரையை சேர்ந்தவர் மகேஷ்(35). பானிபூரி வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளது. இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியவில்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த மகேஷ் நேற்று முன் தினம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மதுக்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோவை இடையர்வீதியை சேர்ந்தவர் யாமினி(29). இவருக்கு திருமணமாகி கணவரும், 2 குழந்தைகளும் உள்ளனர். கணவரிடம் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த யாமினி நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வெரைட்டி ஹால் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோவை வெள்ளலூர் கம்பன் தெருவை சேர்ந்தவர் ஜீவானந்தம்(60). இவருடைய மனைவி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் குடிபோதைக்கு அடிமையான இவர் நேற்று முன் தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போத்தனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். கோவை சின்னியம்பாளையம் டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் ரங்கசாமி(75). இவர் நேற்று முன் தினம் வீட்டில் ஏற்பட்ட பிரச்னையில் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பீளமேடு போலீசார் விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் மாயக்குளம் புலந்தையை சேர்ந்தவர் சுந்தரபாண்டியன்(22). கோவை சாய்பாபா காலனியில் உள்ள மார்க்கெட்டில் லோடுமேனாக வேலை பார்த்து வந்தார். காதலியிடம் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து நேற்று முன்தினம் மார்க்கெட் அருகே உள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சாய்பாபா காலனி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருச்சி குளித்தலையை சேர்ந்தவர் ஸ்ரீரங்கன்(35). பெயிண்டர். பரமகுடியை சேர்ந்தவர் சுதா(45). ரியல் எஸ்டேட் ஊழியர். சுதாவின் கணவர் இறந்து விட்டதால் தன்னுடைய 2 குழந்தைகளையும் தாய் வீட்டில் விட்டு விட்டு கோவை சிங்காநல்லூரில் சுதாவும், ஸ்ரீரங்கனும் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த ஸ்ரீரங்கன் நேற்று முன் தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிங்காநல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.