குழந்தை பிறந்த சில நாளில் நர்சு தூக்கிட்டு தற்கொலை

கோவை, மார்ச்.14:கோவையில் குழந்தை பிறந்த சில நாட்களில் தனியார் மருத்துவமனை நர்சு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுதொடர்பாக ஆர்.டி.ஓ.விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.கோவை சரவணம்பட்டி அருகே விசுவாசபுரம் சுபகிருஷ்ணா நகரை சேர்ந்தவர் ஸ்டாலின்(31). ஐ.டிநிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி பெட்ரிசியா ஜெனிபர் ரூபி(27). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டு ஆகிறது. பெட்ரிசியா ஜெனிபர் பி.எஸ்.சி.நர்சிங் படித்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் இந்த தம்பதியினருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பெட்ரிசியா பிரசவ விடுப்பில் வீட்டில் இருந்து வந்தார். அவர்கள் குடியிருக்கும் வீட்டில் தண்ணீர் வசதி இல்லாததால் வேறு ஒரு வாடகை வீட்டை பார்த்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் ஒரு வீட்டை பார்த்துள்ளனர். ஆனால் அங்கும் தண்ணீர் வசதி இல்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையே நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. பின்னர் வெளியில் சென்றிருந்த ஸ்டாலின் வீட்டிற்கு திரும்பினார். அப்போது படுக்கையறையில் உள்ள மின்விசிறியில் மனைவி பெட்ரிசியா தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து கதறி அழுதார். இது குறித்து சரவணம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். இந்த தம்பதியினருக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குழந்தை பிறந்த சில தினங்களில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: