தாறுமாறாக ஓடிய சரக்கு வேன் 5 பைக் மீது மோதி விபத்து

ஈரோடு, மார்ச் 14: ஈரோட்டில் தாறுமாறாக ஓடிய சரக்கு வேன் 5 பைக்குகள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. குடிபோதையில் இருந்த சரக்கு வேன் டிரைவருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.ஈரோடு சம்பத்நகர் வழியாக நேற்று முன்தினம் சரக்கு வேன் ஒன்று  சென்று கொண்டிருந்தது. நசியனூர் ரோட்டில் வந்த போது வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதனால், ரோட்டோரம் நடந்து சென்ற பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். பின்னர், ரோட்டோரம் நின்றிருந்த 5 பைக்குகள் மீது மோதிவிட்டு வேன் நிற்காமல் சென்றது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள் பைக்கில் விரட்டி பிடித்து வேனை மடக்கினர்.

தாறுமாறாக ஓட்டிய டிரைவரிடம் விசாரித்தனர். அப்போது அவர் குடி போதையில் இருந்தது தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள், டிரைவருக்கு தர்மஅடி கொடுத்து வீரப்பன் சத்திரம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், ஈரோடு வீரப்பன்சத்திரம் ஆண்டவர் வீதியை சேர்ந்த ஜெயக்குமார் (42) என தெரியவந்தது. அவர் குடிபோதையில் இருந்ததை போலீசார் உறுதி செய்தனர்.இதையடுத்து ஜெயக்குமார் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், வேனை பறிமுதல் செய்தனர்.

Related Stories: