ஈரோடு, மார்ச் 14: நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளதால் ஈரோடு மாநகராட்சி சார்பில் பஸ் ஸ்டாண்டில் பஸ்களுக்கான சுங்க கட்டணம் வசூல் உட்பட மூன்று இனங்களுக்கான ஏலம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.ஈரோடு மாநகராட்சி நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள பழைய பஸ் ஸ்டாண்ட் மற்றும் புது பஸ் ஸ்டாண்டில் பஸ்களுக்கு சுங்கக்கட்டணம் வசூல் செய்வதற்கு ஏலம் விடப்படுகிறது. இதில், கலந்து கொள்ள 5 லட்சம் ரூபாய் டெபாசிட் தொகையும், 15 லட்சம் ரூபாய்க்கு டிடி.,யும் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
மேலும், நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில் உள்ள 90 கடைகளுக்கும், பின்புறம் உள்ள கட்டண கழிப்பிடத்திற்கு கட்டணம் வசூலிக்கும் உரிமத்திற்கும், காமராஜர் சாலை வணிக வளாக தரைதள கடைக்கும் 12ம் தேதி (நேற்று) ஏலம் விடப்படும் என மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டது. மேலும், ஏலதாரர்கள் ஏலத்தில் கலந்து கொள்வதற்காக 11ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வங்கி உத்தரவாத சான்று, வங்கி வரைவோலை, டெபாசிட் தொகை செலுத்த வேண்டும் என அறிவித்திருந்தனர். இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் நேற்று நடப்பதாக இருந்த ஏலம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.