தம்மம்பட்டி, மார்ச் 14: தம்மம்பட்டி அருகே சேரடி மலையடிவார கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு ₹5 ஆயிரம் மற்றும் நிவாரண பொருட்களை தாசில்தார் சுந்தரராஜன் வழங்கினார்.
தம்மம்பட்டி அருகே உள்ள சேரடி மலையடிவாரத்தில், சுமார் 100க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம், அழகப்பன் என்பவர் தனது விவசாய தோட்டத்தில் குப்பைக்கு தீ வைத்த போது, தீ அருகில் இருந்த குடிசை வீடுகளுக்கு பரவியது. இதில் 10 வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்த கெங்கவல்லி தாசில்தார் சுந்தரராஜன், அவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன், தலா ₹5 ஆயிரம், வேட்டி, சேலை, அரிசி, மண்ணெண்ணெய் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது, வட்ட வழங்கல் அலுவலர் செல்வக்குமார், விஏஓ சடையன் ஆகியோர் உடனிருந்தனர்.