நெல்லை, பிப். 22: தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் மற்றும் தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்ககம் சார்பில் நெல்லை சந்திப்பு ஓட்டல் ஆர்யாசில் “தொழிற்சாலைகளுக்கு பொருந்தும் தொழிலாளர் நலச்சட்டங்கள்” என்ற தலைப்பில் 2 நாட்கள் கருத்தரங்கு நடந்தது. தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குநர் ராஜசேகரன் குத்துவிளக்கு ஏற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்தார். தொழிற்சாலைகள் சட்டம் குறித்து அவர் விளக்கினார்.தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துறையில் இணையதளம் வழியாக தகவல் பதிவேற்றம் செய்து உரிமம் புதுப்பித்தல் தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் தொழிலாளர் சட்டங்கள் குறித்து நெல்லை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் நிறைமதி, இணை இயக்குநர் அப்பாவு சாம்ராஜ்(ஓய்வு), துணை இயக்குநர் தீபா, உதவி இயக்குநர் சஜின் மற்றும் நெல்லை தொழிலாளர் துறை இணை ஆணையர் ஹேமலதா, துணை ஆணையர் அப்துல் காதர் சுபையர் மற்றும் தொழிலாளர் வைப்புநிதி அமலாக்கப்பிரிவு ரமண கேசவா, தொழிலாளர் காப்பீட்டு கழக இணை இயக்குநர் அருள் ஆகியோர் சட்டங்களை விளக்கி பேசினர். தொழிற்சாலை பிரதிநிதிகள் சுமார் 100 பேர், கருத்தரங்கில் கலந்து கொண்டனர். தொழிலாளர் கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் கவிதா நன்றி கூறினார்.