தூத்துக்குடி, பிப். 22: தூத்துக்குடியில் வரும் 24ம் தேதி நடைபெறும் தனியார் வேலைவாய்ப்பு முகாமை திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி எம்பி துவக்கிவைக்கிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற திமுக நாடாளுமன்ற குழு தலைவரான கனிமொழி எம்பியிடம் கோரிக்கை வைத்த இளைஞர்கள் பலர் வேலைவாய்ப்பு, மருத்துவ வசதி கிடைக்கவில்லை என்றனர். இதையடுத்து கனிமொழி எம்பி ஏற்பாட்டின் பேரில் தாளமுத்துநகரில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் பயன்பெற்றனர். இதன் தொடர்ச்சியாக அவரது ஏற்பாட்டின் பேரில் கருணை அறக்கட்டளை சார்பில் சுமார் 6 ஆயிரம் பேர் பங்கேற்கும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் மகளிர் கலைக் கல்லூரியில் நாளை மறுதினம் (24ம் தேதி) காலை 9 மணிக்கு நடக்கிறது.