கயத்தாறு, பிப். 22: தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே வில்லிசேரியில் 1200 ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது கதிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்தது. இந்நிலையில் நேற்று மாலையில் சோளக்கதிர்கள் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ அடுத்தடுத்த விளைநிலங்களுக்கும் பரவியது. இதையறிந்த விவசாயிகள் தீயை அணைக்க கடுமையாக போராடினர். தீ வேகமாக எரிந்ததால் அணைக்க முடியவில்லை. இதுகுறித்து கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பாதை சரியில்லாததால் வீரர்களும் வாகனத்தை உள்ளே கொண்டு செல்ல இயலாமல் பாதி வழியிலேயே நிறுத்திவிட்டு இயற்கையான முறையில் தீயை செடி, கொடிகளை கொண்டு அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 3 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு தீ எரிந்து கொண்டிருப்பதால் வீரர்களும் தீயை அணைக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர்.