திருப்பூர், பிப்.22: பருத்தி விவசாயிகளுக்கு மானியம் வழங்கி ஊக்கப்படுத்துவதோடு, இந்திய பருத்தி கழகம் மூலம் நேரடியாக பஞ்சு கொள்முதல் செய்து பஞ்சாலைகளுக்கு குறைந்த விலைக்கு வழங்கவேண்டுமென பஞ்சாலை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தெலுங்கானா, ஆந்திரா, மகாராஸ்டிரா, உத்தரபிரதேசம், குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் ஆண்டுதோறும் 3.5 லட்சம் டன் பருத்தி உற்பத்தி செய்யப்படுகிறது. நம்நாட்டில் உள்ள பஞ்சாலைகளுக்கு 3 லட்சம் டன் பருத்தி தேவைப்படுகிறது. 50 ஆயிரம் டன் பருத்தி இருப்பு உள்ள நிலையில் தட்டுப்பாடு ஏற்படுவது பஞ்சாலை உரிமையாளர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பருத்தி கழகம் பெயரளவில் உள்ளதால் தனியார் கார்பரேட் நிறுவனங்கள் பருத்தி விவசாயிகளிடம் மொத்தமாக கொள்முதல் செய்து ஏற்றுமதி செய்து நாட்டில் பஞ்சு தட்டுப்பாட்டை ஏற்படுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து பஞ்சாலை உரிமையாளர்கள் மத்திய அரசுக்கு பல முறை புகார் கூறியும் இது வரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. கார்ப்பரேட் பஞ்சாலை நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து பஞ்சு இறக்குமதி செய்கின்றனர். இதற்காக பல கோடி ரூபாய் முதலீடு செய்கின்றனர்.