×

புதுமாப்பிள்ளையை அடித்து கொலை செய்த வழக்கு 2 சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது

பொன்னேரி, பிப். 22: மீஞ்சூரில் திருமணத்திற்கு சென்றபோது புதுமாப்பிள்ளை அடித்து கொலை செய்த வழக்கில் 2 சிறுவர்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.  5 ஆயிரம் ரூபாய் பணத்துக்காக  இந்த கொலையை செய்ததாக குற்றவாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர். மீஞ்சூர் அண்ணா தெருவைச் சேர்ந்தவர் எத்திராஜ், இவரது மகன் லட்சுமணன் (25) தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு வரும் மார்ச் மாதம் திருமணம் நடக்க இருந்தது. இந்நிலையில் கடந்த 10ம் தேதி லட்சுமணன் மீஞ்சூரில் நடந்த நண்பர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு பைக்கில் சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. பெற்றோர் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், இதுகுறித்து லட்சுமணனின் பெற்றோர் 13ம் தேதி மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து லட்சுமணனை தேடி வந்தனர். இந்நிலையில், கடந்த 14ம் தேதி லட்சுமணன் சென்ற திருமண மண்டபத்தின் பின்புறம் உள்ள கிணற்றில் தலையில் காயத்துடன் சடலமாக கிடந்தார். சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். மேலும், கொலை தொடர்பாக விசாரிக்க திருவள்ளூர் மாவட்ட எஸ்பி பொன்னி உத்தரவின் பேரில், பொன்னேரி உதவி கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி மேற்பார்வையில், மீஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

போலீசாரின் விசாரணையில், லட்சுமணன் பயன்படுத்திய பைக் சென்னை ஒரகடம் பகுதியில் இருப்பதாக தெரியவந்தது. உடனே போலீசார் அங்கு சென்று பைக்கை திருடி சென்ற நபரை பிடித்து விசாரித்தனர். அதில், மீஞ்சூர் ஏரிக்கரை சேர்ந்த அஜித் (25) என்று தெரியவந்தது. அவன் கொடுத்த தகவலின் பேரில் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (25), காட்டூர்    கோளூரை சேர்ந்த இன்பராஜ் (21), மற்றும் 16 வயது சிறுவர்கள் இரண்டு பேரும் அப்பகுதியில் அடிதடி தகராறு, வழிபற்றி, மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டுவந்துள்ளனர். இந்நிலையில், சம்பவத்தன்று திருமணத்திற்கு வந்த லட்சுமணன் மண்டபத்தின் பின்புறம் தனியாக அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார், அப்போது அங்கு சென்ற 5 பேரும் லட்சுமணனை மிரட்டி அவர் பாக்கெட்டில் இருந்த 5 ஆயிரம் பணம் மற்றும் செல்போனை பறித்துள்ளனர். இதில், அந்த கும்பலுக்கும் லட்சுமணனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரம் அடைந்த 5 பேரும் அருகில் இருந்த பீர் பாட்டிலை கொண்டு லட்சுமணன் தலையில் அடித்து கொலை செய்துவிட்டு அருகில் உள்ள கிணற்றில் வீசி சென்றதாக போலீசாரிடம் தெரிவித்தனர்.
 
இதனை தொடர்ந்து போலீசார்  5 பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து அவர்களை பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின் பேரில் அஜித், மணிகண்டன், இன்பராஜ்  ஆகிய 3 பேரையும் புழல்சிறையிலும் சிறுவர்கள் 2 பேரையும் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

Tags : children ,
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...