பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து மாணவர்கள் 5 பேர் படுகாயம்: போதை டிரைவரால் விபரீதம்

பல்லாவரம்: குன்றத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளை பள்ளி நிர்வாகம் தினமும் தங்களது வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் செல்வது வழக்கம். அதன்படி, நேற்று காலை குன்றத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளான கொளப்பாக்கம், கெருகம்பாக்கம் ஆகிய பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகளை வேனில் அழைத்துக்கொண்டு பள்ளிக்கு புறப்பட்டனர். வண்டியில் 15க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இருந்தனர். அனகாபுத்தூரை சேர்ந்த சதீஷ் (27) என்பவர் வேனை ஓட்டி வந்தார். குன்றத்தூர் கரைமாநகர் பகுதியை சேர்ந்த சித்ரா (55) என்பவர், குழந்தைகளை வேனில் ஏற்றி இறக்கி விடும் பணியில் இருந்தார். தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் அருகே உள்ள சர்வீஸ் சாலையில் தரப்பாக்கம் அருகே வேன் வந்தபோது, சாலையோரமாக இருந்த பள்ளத்தில் திடீரென வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் 5 மாணவர்கள் மற்றும் பணியாளர் சித்ரா ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி மக்கள் உடனடியாக மாணவர்களை மீட்டனர். பின்னர், படுகாயமடைந்தவர்களை உடனடியாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து வந்த பூந்தமல்லி போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலீசார், வேன் டிரைவரை பிடித்து விசாரித்தபோது, அவர் மது போதையில் இருந்தது தெரியவந்தது. அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: