ஈரோடு, பிப். 21: ஈரோடு சம்பத் நகர் விஐபி காலனியை சேர்ந்தவர் சுரேஷ் (52). இவர் கள்ளுக்கடை மேடு பகுதியில் ஸ்வீட் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் ஒரு மர்மநபர் சுரேஷ் கடைக்கு வந்தார். அப்போது அந்த நபர் சுரேஷை கத்தியை காட்டி மிரட்டி ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளார். ஆனால் சுரேஷ் பணம் இல்லை என்றதால் அவரை தகாத வார்த்தையால் பேசி, கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றார். இதுகுறித்து சுரேஷ் ஈரோடு சூரம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.இந்த புகாரின் பேரில், விசாரணை நடத்தி நேற்று காலை அந்த மர்மநபரை போலீசார் பிடித்து சென்றனர். அந்த நபர், ஈரோடு வளையக்கார வீதி அய்யனாரப்பன் கோயில் வீதியை சேர்ந்த மகேஸ்வரன் மகன் செல்வராஜ்(30) என்பதும், ஆக்டிங் டிரைவராக இருப்பதும் தெரியவந்தது. செல்வராஜை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.