சத்தி நகர் பகுதியில் கொட்டப்படும் குப்பையால் தொற்றுநோய் பரவும் அபாயம்

சத்தியமங்கலம், பிப். 21:  சத்தியமங்கலம் நகர் பகுதியில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.   சத்தியமங்கலம் நகராட்சிக்குட்பட்ட வடக்குப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியை ஒட்டி காசிக்காடு மற்றும் அரசு கலை கல்லூரி செல்லும் சாலை அமைந்துள்ளது. இச்சாலை வழியாக கல்லூரி மற்றும் அரசு மாதிரிப்பள்ளிக்கு செல்வோரும், இப்பகுதியில் உள்ள தோட்டசாலைகளில் வசிக்கும் விவசாயிகளும் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.இந்நிலையில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் மர்மநபர்கள் குப்பைகளை பாலித்தீன் பைகளில் அடைத்து சாலையோரத்தில் கொட்டிவிட்டு செல்கின்றனர். இதன் காரணமாக குப்பைகள் குவிந்து கிடப்பதோடு ஒருவிதமான துர்நாற்றம் வீசுகிறது. நகர் பகுதியிலிருந்து தினமும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு குப்பைகிடங்கிற்கு கொண்டு சென்று கொட்டப்படும் நிலையில் இரவு நேரத்தில் குப்பைகளை கொண்டுவந்து கொட்டுவது யார் என கண்டுபிடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: