ரயில், பைக்கில் இருந்து விழுந்து 2 போலீஸ்காரர்கள் பரிதாப சாவு

சென்னை: விழுப்புரம் வைலாமூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சுபாஷ் (28). ஆயுதப்படை காவலர். சுபாஷ் சொந்த ஊருக்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் சேலம் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னைக்கு திரும்பி கொண்டிருந்தார்.

நேற்று அதிகாலை 2.30 மணிக்கு பரனூர் சிங்கபெருமாள் கோவில் அருகே வந்தபோது திடீரென ரயிலில் இருந்து சுபாஷ் தவறி விழுந்தார். அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு அரசு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு 1 மணிக்கு சுபாஷ் இறந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

ஆவடி: ஆவடி திருநின்றவூர் நத்தம்பேடு, மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் கணேசன் (47). பொன்னேரி மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஏட்டு. கடந்த 8ம் தேதி கணேசன் வேலை முடிந்து பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டார்.

ஆவடி மோரை சர்வீஸ் சாலை வந்தபோது திடீரென பைக்கில் இருந்து தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு நுரையீரலில் காயம் ஏற்பட்டது. உறவினர்கள் அவரை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு கணேசன் இறந்தார். பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

* கிழக்கு தாம்பரம், கணபதிபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (50). கூடுவாஞ்சேரி தனியார் பள்ளி ஆசிரியர். நேற்று முன்தினம் வேலை முடிந்து, கூடுவாஞ்சேரியில் இருந்து பெருங்களத்தூருக்கு மின்சார ரயிலில் வந்தார்.

பின்னர் செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்றபோது திடீரென நிலைதடுமாறி விழுந்தார். அப்போது அவர், பயணம் செய்த ரயில் அவர் மீது ஏறி இறங்கியதில் சுப்பிரமணி சம்பவ இடத்தில் இறந்தார். தாம்பரம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

* ஆவடி கொள்ளுமேடு, கங்கா தெருவை சேர்ந்தவர் ஹரிபாபு (55). ஜோதிடர். கடந்த 18ம் தேதி இரவு ஹரிபாபு குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர், வீட்டு முன்பு நிலைதடுமாறி கீழே விழுந்தபோது அவர் மீது பைக் விழுந்துள்ளது. இதில் படுகாயம் அடைந்து ஹரிபாபு இறந்தார்.

* நெற்குன்றம், ஜெயராம் நகர், 16வது தெருவை சேர்ந்தவர் துரை (40). இவரது மனைவி புனிதா (36). திருமணமாகி 10 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. கடந்த சில மாதங்களாக தம்பதி இடையே தகராறு இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த வாய்த்தகராறில், கணவரிடம் கோபித்துக்கொண்டு புனிதா சொந்த ஊருக்கு சென்றார்.  

இதில் மனம் உடைந்த துரை நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

* கோயம்பேடு பஸ் நிலையத்தில் கடந்த 13ம் தேதி கஞ்சா விற்பனை செய்த கேரளாவை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் நஜுமோன் (20) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் அமைந்தகரையை சேர்ந்த விக்கி (எ) விக்னேஷ் (26) என்ற வியாபாரியிடம் கஞ்சா வாங்கி புதுவையில் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ததை நஜுமோன் ஒப்புக்கொண்டார். எனவே விக்கியை போலீசார் தேடி வந்தனர்.

நேற்று கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஆட்டோவில் சுற்றிவந்து விக்கி கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்தது. உதவி ஆய்வாளர் தேசிங்குராஜன் மற்றும் போலீசார் சென்று விக்கியை சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர்.

* துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்தவர் ராமதாஸ்  (28). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு நண்பர் செந்தமிழ்ச்செல்வன்  (25) என்பவருடன் பைக்கில் செம்மஞ்சேரி நோக்கி வந்து கொண்டிருந்தார்.

சிறுவர் பூங்கா அருகே வந்தபோது பைக் கட்டுப்பாட்டை இழந்து பிளாட்பாரத்தில் மோதி தூக்கி வீசப்பட்டதில் ராமதாஸ் சம்பவ இடத்தில் இறந்தார். செந்தமிழ்ச்செல்வன் காயத்துடன் உயிர் தப்பினார். மவுண்ட் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.  

* சென்னை ஆயிரம்விளக்கு 2வது தெருவில் தனியார் நிறுவனம் சார்பில் அடுக்குமாடி கட்டுமான பணி நடந்து வருகிறது. இங்கு வேலை செய்து வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த டக்கா தாஸ் (31) என்பவர் நேற்று முன்தினம் இரவு மது போதையில் 4வது மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்தார்.

* சோழிங்கநல்லூரை சேர்ந்தவர் 25 வயது பெண். இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்தபோது ஒரு வாலிபர் புகுந்து தவறாக நடக்க முயன்றுள்ளார். அந்த பெண் அவரை தள்ளிவிட்டு வெளியே ஓடிவந்து கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததால் வாலிபர் அங்கிருந்து தப்பி சென்றார்.

இதுகுறித்து செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி சோழிங்கநல்லூர் காந்தி நகர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த செல்வம் (35) என்பவரை கைது செய்தனர். பின்னர் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: